மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அதிமுக மாநகர தெற்கு பகுதி, 39வது வட்டம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் மாவட்ட அளவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், இந்த முறை ஜெயலலிதாவின் பிறந்தநாளை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டாட கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், அதிமுக தலைமை செயலகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24.2.2026 அன்று, அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூச வேண்டும். கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்ற வேண்டும்.
தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே அவருடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கண் தானம், ரத்த தானம் செய்தல்,மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்.
மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி, 39வது வட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. அதிமுக காஞ்சிபுரம் மேற்கு பகுதி இளைஞர் அணி செயலாளர் ஆனந்தபாபு ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் துவக்கி வைத்தார். 16 அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

