நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பரவிய தகவல் குறித்து கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவு நாளை முன்னிட்டு இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சமபந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவின்போது கோயிலில் மதியம் அன்னதானம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த சமபந்தி விழாவை தொடங்கி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று சமபந்தி விழா நடைபெற்றது. திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலிலும் இந்க விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தி விழாவை தொடங்கி வைத்தார்.

நெல்லையப்பர் கோயில் சமபந்தி நிகழ்வில் பங்கேற்றவர்கள்
பின்னர் சமபந்தியின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் ஏழை, எளிய மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். சபாநாயகர் கோயிலுக்குள் உணவருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர், சிறுமியருக்கு சமபந்தி விருந்தி்ல் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சுத்தமல்லியை சேர்ந்த அந்த சிறுவர், சிறுமியர் கோயிலுக்குள் அன்னதானம் நடைபெறுவதை அறிந்து பசியோடு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது கோயில் ஊழியர்கள் அவர்களை உள்ளே விட மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவர்கள் பேசும் வீடியோவில், நாங்கள் கோயிலுக்கு சாப்பிட சென்றோம்; ஆனால் எங்களை உள்ளே விடவில்லை. டேவிட் அண்ணன் தான் எங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார் என்று அப்பாவித்தனத்துடன் கூறியுள்ளனர்.
கோயில் வாசலில் சிறுவர்கள் பசியோடு நின்றதை பார்த்த சமூக ஆர்வலர் டேவிட் என்பவர் உடனடியாக எதிரில் இருந்த பிரபல தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று சுவையான உணவு வகைகளை வாங்கி கொடுத்துள்ளார். சமபந்தி விருந்து என்றாலே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் சமுதாயத்தில் ஒன்று தான் என்பதை வலியுறுத்தும் ஒரு நிகழ்வு. இதுபோன்ற சமபந்தி விருந்தில் ஏற்றத்தாழ்வுடன் சிறுவர்களை கோயில் ஊழியர்கள் புறக்கணித்ததாக வெளியாகி உள்ள தகவல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,’ அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 03-02-2026 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை டேவிட் ராஜா என்பவர் முகநூல் பக்கத்தில் கோயில் சமபந்தி விருந்தில் பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார்.
சமபந்தி விருந்து என்பது பொதுவானது. இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை. வந்திருந்த 792 பயனாளிகளும் உணவு அருந்திவிட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் உண்மைக்கு புறம்பாக பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

