கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3-வது முறையாக ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து தனி விமானத்தில் அவர் கடந்த 14-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த விஜய், சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். காலை 11 மணிக்கு அவரிடம் விசாரணை தொடங்கியது. குறிப்பாக, பிரச்சாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் நெரிசலுக்கு காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை மீண்டும் எழுப்பினர்.
அதிகாரிகள் புதிதாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். அத்துடன், ஏற்கெனவே கேட்ட கேள்விகளை மீண்டும் கேட்டனர். முன்பு அளித்த பதிலைத்தான் விஜய் கூறுகிறாரா, மாற்றிக் கூறுகிறாரா என்பதை பதிவு செய்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் அளித்த பதில்களுக்கும், கட்சி நிர்வாகிகள் அளித்த விளக்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை முன்வைத்தும் விஜய்யிடம் அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்காக பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் அவரிடம் காண்பித்து விளக்கம் பெற்றனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார்.

