மதுரையில் பாஜக சார்பில் துவங்கிய நீதி கேட்கும் பயணம் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி என அக்கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் நீதி கேட்கும் பிரசார பயண துவக்க விழா மதுரை அண்ணாநகரில் நடந்தது.
இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
தவறான நீதி சொன்ன ஆட்சிக்கு எதிராக கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் இருந்து இப்பயணம் துவங்கியள்ளது.
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது.
வல்லபாய் படேலுக்கு பிறகு வந்த இரும்பு மனிதராக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அவரால் தான் ஆர்டிக்கல் 370 ரத்து செய்ய முடிந்தது. திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார்.
திமுகவை மக்களே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவர் என அமித்ஷா அன்றைக்கே தெரிவித்துவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை. வெறும் காட்சிகள் தான் நடக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய போதே திமுகவுக்கு முன்னுரை எழுதிவிட்டார்.
பாஜகவின் இந்த நீதி கேட்கும் பயணம் திமுகவுக்கு முடிவுரையை எழுதும்.
இன்னும் 177 நாட்கள் தான் உள்ளன. ஒவ்வொரு நாளும் நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
இந்த பிரசாரத்தின் நோக்கமே 2026 ல் நாம் கூட்டணி எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எல்லோரும் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சியா நடக்கிறது – எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறார் ஸ்டாலின்.
மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசு உறவு வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு தோள் கொடுப்போம் என மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சொன்னார்.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து ரூ.40 ஆயிரம் கோடி நிதி பெற்றுத்தந்தார். டபுள் இன்ஜின் அரசு தான் மாநில வளர்ச்சிக்கு தேவை.
இது புரியாமல் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து தமிழை விற்று திமுகவினர் பிழைப்பு நடத்துகிறார்கள்.
கச்சத்தீவை தாரைவார்க்க துணை போனவர்கள். ஆனால் அதிமுக பாஜக தமிழை போற்றும் கட்சிகளாக உள்ளன. திமுக பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளன.
மின் கட்டணம், சொத்துவரிகள் தான் உயர்ந்துள்ளன. போதைப் பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் வளர்ச்சி.
திமுக ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் எண்ணத்துவங்கினார் நயினார் நாகேந்திரன்
கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன்.
ஏனென்றால் அந்த சம்பவம் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடந்தது என எல்லோரும் சொல்கிறார்கள்.
அங்கு நடந்த உயிர்ப் பலிகளுக்கு திமுக காரணம். இதையெல்லாம் சிந்திக்க வைக்கவும், திமுகவின் மோசமான ஆட்சியை அகற்றுவதற்காக தான் இப்பயணம். எங்களுக்கு மக்கள் மனதில் இடம் உள்ளது என்றார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.க., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

