பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில், கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், வழக்கறிஞர் ஹிரிஹரன் உள்ளிட்ட 27 பேரை, போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்ட நபர்களிடம் நகலும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை; சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற விபரங்களில் பல முரண்பாடுகள் உள்ளன என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் 6 மாதங்களில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அரசியல், ஊடகம் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுவரை விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

