ஐபிஎல் தொடரில் நடைமுறையில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி ஆல் ரவுண்டர்களுக்கு எதிராக உள்ளது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தொடருக்காக தீவிரமாக தயாராகும் வகையில் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான அக்ஸர் படேல், ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறையானது ஆல் ரவுண்டர்களுக்கு எதிராக உள்ளது என்ற கருத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அக்ஸர் படேல், “ஐபிஎல் தொடரில் உள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறையானது எனக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு ஆல்-ரவுண்டர். முன்னெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் கருத்தில் கொண்டுதான் நாங்கள் ஆல்-ரவுண்டர்களைத் தேர்வு செய்வோம். ஆனால் இந்த இம்பேக்ட் வீரர் விதியால், ஒவ்வொரு அணி நிர்வாகமும் ஒரு குறிப்பிட்ட பேட்டர் அல்லது பவுலரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.
அதனால் தற்போது ஏன் ஆல்-ரவுண்டர் தேவை? என்ற கேள்விகளும் உருவாகத் தொடங்கியுள்ளது. எனவே, ஒரு ஆல்-ரவுண்டராக எனக்கு இந்த விதிமுறைகள் பிடிக்கவில்லை. அதே சமயம், விதிமுறை என்று இருந்தால் நாம் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தைப் பொறுத்தவரை எனக்கு இந்த விதி பிடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இம்பேக்ட் வீரர் விதிமுறையானது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போது பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையை பிசிசிஐ அமல்படுத்தியது. அப்போதே இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பிசிசிஐ அடுத்தடுத்த சீசன்களில் இந்த விதியை பின்பற்றி வருகிறது.
பின்னர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து பேசிய அக்ஸர் படேல், “டெல்லி அணியின் கேப்டனாக இது எனக்கு இரண்டாவது ஆண்டு. எனவே ஒரு அணியாக நாம் எப்படி விளையாட வேண்டும் என்பதில் எனக்கு கூடுதல் தெளிவு இருக்கிறது. கடந்த சீசனில், களச் சூழல்கள், வீரர்கள் மற்றும் ஒரு கேப்டனாக என்னைப் பற்றியும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். வீரர்களுக்குப் பின்னால் அணி நிர்வாகம் துணை நிற்கிறது என்ற எண்ணம் வரும்போது, சிறந்த செயல்பாடுகள் தானாகவே வெளிப்படும். அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏப்ரல் 1ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும், ஏப்ரல் 8ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராகவும், ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

