AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் IT துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி PVR சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது IT துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
AI தாக்கத்தால் 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும் பணிபுரிவோர் AI தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்வதால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
AI குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும்.
இது வெறும் 20 லட்சம் பேர் வேலை இழப்பு சம்பந்தப்பட்டது மட்டுமின்றி 2 – 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்புடையது ஆகும்.
எனவே தனிநபர்கள் AI தொடர்பான பயிற்சியில் இணைந்து, தங்கள் சூழலுக்கு ஏற்ப திறமையை தகவலமைத்து கொள்வது அவசியம்.
நம் நாட்டுக்கு அதன் மக்கள்தான் உண்மையான பலம். உலகில் அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்.
AI காரணமாக வரப்போகும் மாற்றங்களை சாதகமான வாய்ப்புகளாக மாற்ற தேசிய AI திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை துவங்க வேண்டும்.
இந்தியாவை உலகிலேயே அதிக AI நிபுணர்களை கொண்ட நாடாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

