இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து பிரபல யூட்யூபரை திருமணம் செய்து கொள்ளவதாக கூறி 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் துணை நடிகை திவ்ய பாரதி. மேலும், இதே பாணியில் பல ஆண்களை ஏமாற்றியுள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
யூடியூப் சேனல்
கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோகள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வந்தார். தனது கவிதை வீடியோக்களில் நடிப்பதற்காக நல்ல நடிகர் நடிகைகளை தேடிய வந்தார்.

அப்போது தான் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆனார். திவ்யபாரதி இதற்கு முன்பே சில சினிமாக்களில் துணை நடிகையாகவும் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பகலவன் ராஜா தனது கவிதை தொகுப்பு வீடியோவிற்கு திவ்ய பாரதியை நடிக்க வைத்து வெளியிட்டார்.
திவ்யபாரதி பகலவன் ராஜாவிற்கு அடிக்கடி போன் செய்து மணிக்கணக்கில் பேசியுள்ளார். இதனால் பகலவன் ராஜாவிற்கும் திவ்யபாரதிக்கும் நெருக்கம் அதிகமாகியுள்ளது. ஒருக்கட்டத்தில் திவ்ய பாரதி தனது குடும்பத்துடன் சென்று கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதன் மூலம் பகலவன் ராஜா குடும்பதோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டார் திவ்ய பாரதி.
பெண் குழந்தைகள்
பகலவன் ராஜா வீட்டிற்கு செல்லும்போது எல்லாம் திவ்ய பாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். அக்குழந்தைகளை பற்றி பகலவன் ராஜா குடும்பத்தார் விசாரித்த போது, ‘இவர்கள் என் அக்காவின் குழந்தைகள். அக்கா கணவர் அக்காவை விட்டு பிரிந்து விட்டதால் நான் தான் இவர்களை வளர்க்கிறேன். எனக்கு திருமணம் ஆகவில்லை’ என்று திவ்யபாரதி கூறியுள்ளார். இதையெல்லாம் நம்பி பகலவன் ராஜா திவ்ய பாரதியை காதலித்து வந்துள்ளனர். இதை பற்றி அறிந்த பகலவன் ராஜாவின் தாய் பகலவன் ராஜாவிற்கும் திவ்ய பாரதிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

ஆனால் திவ்ய பாரதி திருமணத்திற்கு காலம் கடத்தி வந்தார். அதேநேரத்தில் திவ்ய பாரதி திண்டுக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். பகலவன் ராஜாவிடம் இருந்து வீட்டுச் செலவுக்காக மாதம்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்துள்ளார் திவ்ய பாரதி. அதுமட்டுமின்றி தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பகலவன் ராஜாவிடம் கேட்டு வாங்கியுள்ளார். மேலும், ஆசை வார்த்தைகளால் எட்டு பவுன் தங்க நகைகளையும் பகலவன் ராஜாவிடம் வாங்கியுள்ளார். ஆனால் பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளவதை பற்றி கேட்டால் மட்டும் திவ்யபாரதி சண்டையிட்டுள்ளார்.
புகார்
திவ்யபாரதியின் இந்த நடத்தையால் பகலவன் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே திவ்ய பாரதியை பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளார் பகலவன் ராஜா. அதன் பிறகு தான் திவ்ய பாரதியை பற்றி முழு விவரங்கள் பகலவன் ராஜாவுக்கு தெரியவந்துள்ளது.
திவ்ய பாரதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் அவர் அக்கா குழந்தை என்று சொன்ன அந்த இரண்டு பெண் குழந்தைகளும் திவ்ய பாரதியின் குழந்தை தான் என்ற உண்மை தெரிய வந்தது. அதன் பிறகு தான் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திவ்யபாரதி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

திவ்யபாரதி உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போதே பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறித்து ஆடம்பரமானா வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஏற்கனவே திவ்ய பாரதி மீது இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பகலவன் ராஜா அளித்துள்ள புகாரால் திவ்ய பாரதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும் பொது மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

