சிம்புவின் 50-ஆவது திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்க உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இது வெள்ளித்திரையின் அவரது 49-ஆவது திரைப்படம் ஆகும். வட சென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் 2-ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி மோதும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சிம்புவின் 50-ஆவது படமாக ‘காட் ஆஃப் லவ்’ எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இப்படம் தொடர்பான புதிய தகவல்களை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இன்று சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அதில், அரசன் படம் நிறைவடைந்த பிறகு, மே மாதம் ‘காட் ஆஃப் லவ்’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதில் சந்தானம் சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவலையும் அவர் வெளியிட்டார்.
மேலும் பேசிய அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடனமாட உள்ளார். அதோடு, பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மாபெரும் வெற்றி படமாக உருவாகும் இதனை அடுத்த ஆண்டு நீங்கள் பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டு வெளிவந்த ‘உவமை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, கடைசியாக 2025 இல் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ‘டிராகன்’ படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறைந்த செலவில், அதிக லாபத்தை ஈட்டித்தந்த படமாக ‘டிராகன்’ படம் இருந்தது.
அந்தவகையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக எடுக்கக்கூடிய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிம்புவின் ரசிகர்களும், இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

