திருநெல்வேலியில் கோயில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு சென்றபோது ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்தபடி சென்றது பேசுபொருளாகியுள்ளது.
சீவலப்பேரியை சோ்ந்தவா் சிதம்பரம். இவர் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுடலை மாடசுவாமி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் கோயில் வருமானம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம கும்பலால் சிதம்பரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார், நான்கு சிறார்கள் உட்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அப்போது நான்கு சிறார்களும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு சிறார்கள் தவிர, மீதமுள்ள 13 பேர் மீதான வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.
அப்போது கொலை வழக்கில் தொடர்புடைய தங்கப்பாண்டி (29), பேச்சி குட்டி (29), முருகன்(28) ஆகிய மூவர் மீதும் குற்றம் உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிகள் என அறிவித்தார். இந்த மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 5000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மீதமுள்ள 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே வழக்கில் தொடர்புடையதாக பிடிக்கப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறார்களின் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பூசாரி கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொலை குற்றவாளிகள் மூவரையும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது அவர்களில் ஒருவரான தங்கப்பாண்டி பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்து ‘ஃபிளையிங் கிஸ்’ கொடுத்து சென்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரசித்தி பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட நபர் எவ்வித குற்றவுணர்ச்சி இல்லாமல் பத்திரிகையாளர்களை பார்த்து ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்து சென்றது பேசு பொருளாகியுள்ளது.

