எங்களுக்கு யாரையும் அழுத்தம் கொடுத்து கூட்டணியில் சேர்க்க வேண்டிய தேவையில்லை, எங்கள் கூட்டணியே பலமாகதான இருக்கிறது என தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகவும், போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்தும், மாநிலம் முழுவதும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெகவை கூட்டணியில் சேர்க்க பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். மேலும், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விளம்பர ஆட்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதும், முதல்வர் சமூக ஊடகங்களில் ரில்ஸ் வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது வருத்தமானதாக உள்ளது. அதே போன்று, கடந்த 5 ஆண்டுகளில் இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை, மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அதில் எந்த ஒன்றிலும் முதல்வர் கலந்து கொள்ளவில்லை.
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழர்களின் அடையாளத்தை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழன அடையாளங்களை பாதுகாப்பது யார்? நாங்களும் நோன்பில் கலந்துகொள்கிறோம். நான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்கும்போதும், தெலங்கானாவில் ஆளுநராக இருக்கும்போதும் நோன்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மதச்சார்பற்ற நிலைப்பாட்டை நாங்கள் கடைபிடிக்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் மதவாதம் உருவாகும் என்று திமுக தரப்பு திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. ஆனால் இவர்கள்தான் தமிழர்களின் அடையாளத்தை குலைத்து வைத்திருக்கிறார்கள்” என்றார். பாஜகவை மதவாத சக்தி என்று குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதை எடுத்துக்காட்டாக கூறிய அவர் அங்கு எந்த மத கலவரமும் நடைபெறவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழின அடையாளம் என்பதன் உண்மை பொருள் எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமாக வாழ்த்து தெரிவிப்பதும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதும், ஒருவர் துன்பப்படும்போது துணை நிற்பதும் ஆகும். ஆனால், இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை, பிரதமர் வந்தால் உரிய வரவேற்பு அளிக்கப்படவில்லை, தூத்துக்குடியில் இத்தனை பெரிய பிரச்சனை நடந்துகொண்டு இருக்கிறது, அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தவெகவை கூட்டணியில் சேர்க்க பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களால் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றனர். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் சக்திகள் இயல்பாக ஒன்றிணைந்துள்ளன. “தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக அழுத்தம் கொடுத்ததா? என்று கேள்வி எழுப்பி. அவர், எங்களுக்கு யாரையும் அழுத்தம் கொடுத்து கூட்டணியில் சேர்க்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, எங்கள் கூட்டணியே பலமாக இருக்கிறது என்றார்.
திமுக ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மாநிலம் முழுவதும் பரவி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் திமுக தொடர்ந்து “பாஜக வந்துவிடும்” என்று கூறி மக்களிடம் அச்சத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் பாஜக ஏற்கனவே தமிழ்நாட்டில் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகிவிட்டது என்றும், அதிமுக தலைமையில் இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது என்றும் கூறினர். இந்து மக்களை புறக்கணிக்கிறார்கள் என்ற உணர்வு மக்களிடையே உருவாகி வருகிறது.தமிழ்நாட்டின் நலனில் யார் உண்மையாக அக்கறை செலுத்துகிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

