ராணிப்பேட்டை மருதாளம் கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாலாஜாபேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (25). இவர் அப்பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த வேலை காரணமாக கோடியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் மருதாளம் கூட்ரோடு பகுதிக்கு சென்றுள்ளார்.
கோபி வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மருதாளம் கூட்ரோடில் சென்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராத விதமாக இளைஞரின் இருசக்கர வாகனத்தை உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர் சாலையில் கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் லாரியின் பின்பக்க டயர் கோபியின் தலைமீது ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபேட்டை போலீசார், உடனடியாக விரைந்து சென்று, உயிரிழந்த கோபியின் உடலை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நொடிப் பொழுதில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

