வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனால், இந்தியாவில் வர்த்தகம் மட்டுமின்றி சமையல் எரிவாயு (LPG) விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், இந்தியாவில் எல்பிஜி விநியோகத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுப்பதற்காக, எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக, அதாவது 15 நாட்களில் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதாக பரவலாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், LPG சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை விட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முகவர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளும் இந்தியாவுடன் எரிவாயு சிலிண்டர் வர்த்தகத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வா?: கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல், டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் மத்திய அரசு வட்டார்ங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள், கசசா எண்ணெய் விலை பேரல் 130 அமெரிக்க டாலர்களை கடந்தால் எரிபொருள்களின் விலை ஒருவேளை உயரலாம் என்று தெரிவித்துள்ளன.
விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளும் நம்மிடம் போதுமான அளவு இருப்பு உள்ளதால், இதுகுறித்தும் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

