ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன்(36) – தங்க முனீஸ்வரி தம்பதி. இவர்களது ஜீவனாம்ச வழக்கு விருதுநகர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த சூழலில், அதுதொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த பாலமுருகன், விசாரணைக்கு இடையே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிபதியை நோக்கி வீசியதாகத் தெரிகிறது. அந்த அரிவாள் நேராக வழக்கறிஞர் அமரும் இடத்தில் விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மாவட்ட மகாவல் கண்காணிப்பாளர் பாலசுந்தர், காவல் ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்ட போலீசார், பாலமுருகனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நீதிபதியை நோக்கி வீசப்பட்ட அரிவாள்
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலமுருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வராத சூழலில், விரக்தியான பாலமுருகன் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியது தெரியவந்தது.
நீதிபதி சுதாகர் தான் குடும்ப நல நீதிமன்றத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உள்ளார். போலீசாரின் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே, பார்வையாளர்களை இந்த நீதிமன்றத்திற்குள் அனுமதிப்பது வழக்கம். இதனை தெரிந்த பாலமுருகன் நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து, அரிவாளுடன் உள்ளே வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவரது எக்ஸ் பக்கத்தில், “தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்த கொடூரத் தாக்குதல் சட்டத்தையும், நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
தீர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகர் மீது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, பொது இடமான நீதிமன்றத்திலேயே ஒரு நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

