நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 25 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேட்டை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், நல்லத்தம்பி, இளங்கோவன், சூரியநேசன், தமிழ்ச்செல்வன், அய்யப்பன், ருத்ரன், ஆசைத்தம்பி, கிருஷ்ணராஜ், மயிலாடுதுறை கார்த்திக்ராஜா, அக்கரைப்பேட்டை பிரவீன், தீபன்ராஜ், தயாளன் மற்றும் சாமந்தன்பேட்டையைச் சேர்ந்த கபிலன், முகிலன் ஆகிய மீனவர்கள் ஒரு படகில் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மற்றொரு படகில் காரைக்காலைச் சேர்ந்த பி.மோகன், கே.சின்னையன், நம்பியார் நகரைச் சேர்ந்த டி.கார்த்திக், டி.அருண், கே.ரத்தின வடிவேலு, கே.முகிலன், ஏ.தரண், பி.புத்தவன், வி.அம்பலவாணன் மற்றும் திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஜி.சபரிநாதன் ஆகிய 25 பேர் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரையும் கைது செய்ததோடு, 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டுச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாவடி செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது.
மேலும் தமிழ்நாடு மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு கோரிக்கை வெற்றுக் கூச்சல் – வைகோ தடாலடி பேச்சு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

