தங்கள் நாட்டிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா இன்னும் நிறுத்தவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்தியாவுடனான உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது” என்றார்.
ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை” என்று தெரிவித்தன.
முன்னதாக,ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த முடிவு செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

