தேனியில் ஃபைனான்சியரை பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலில் வைத்து, மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் நியூ ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. 72 வயதான இவர் தனது மனைவி வசந்தாவுடன் தனியாக வசித்து வந்தார். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள்களுக்குத் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர். பழக்கடை வைத்துள்ள முதியவர் பாண்டி, ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். அத்துடன், ஊருக்குள் பலருக்கு வார வட்டி மற்றும் மாத வட்டிக்கும் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் காலை நேரத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
அதற்காக, வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், பாண்டியின் பின்புறம் இருந்து அவரது கழுத்தில் அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளனர். அடுத்தடுத்து, சரமாரியாக வெட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவாறு அப்படியே சரிந்து விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த பாண்டி நிலைகுலைந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் அவ்வழியாக சென்றவர்கள் ஃபைனான்சியர் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி, கதறி துடித்துள்ளார்.
தகவலறிந்து வந்த தேனி நகர போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் சென்ற வழித்தடத்தை கண்டறியும் பணி நடைபெற்றது.
அத்துடன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ பிரியா, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தொழில் போட்டி காரணமாக ஃபைனான்சியர் பாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

