கடன் சுமையால் கேரளா போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்ததால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடன் சுமை
கேரளா போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவை பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பல்வேறு மாநிலத்தின் சாதாரண சேவை பேருந்துகள் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளா மாநில பேருந்துகள் இல்லாமல் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவிற்கு, இரண்டு நாட்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு செல்வதற்கும் உரிய பேருந்து வசதி இல்லாமல் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்திற்காக வரிசையில் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

