கேரள மாநிலம், மூணாறு அருகே யானை தந்தத்துடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யானை தந்தம் கடத்தல்
கேரள மாநிலம், இடுக்கி வனத்துறை சிறப்பு அதிகாரிக்குயானை தந்தம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மூணாறு அருகே கட்டப்பனை சுவர்ணகிரி அருகே வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்த அருண் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குமுளியில் உள்ள ஒருவருக்கு, யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக, வாகனத்தில் எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த யானை தந்ததை 12 லட்சத்திற்கு விலை பேசி, 2.50 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அருணை கைது செய்த வனத்துறையினர், மேல்விசாரணைக்காக கட்டப்பனை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். தந்தம் கடத்தல் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

