செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொசுவத்தியால் நேரிட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கட்டுமான வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே, அதே பகுதியில் வசித்து வரும் தனது அக்கா மகேஸ்வரியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றிரவு அவரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் பார்த்திபன் சென்றுள்ளார்.
தொடர்ந்து, குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்ததால் பார்த்திபனின் அக்கா மகேஸ்வரியும், அவரது கணவர் ராம்நாத்தும் நள்ளிரவில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பார்த்திபனை வீட்டிற்கு அனுப்பாமல் இங்கேயே தங்குமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.
இதன் காரணமாக, பார்த்திபனும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அக்கா மகேஸ்வரி வீட்டிலேயே தங்கினார். இரவு உணவை முடித்த அவர்கள், உறங்குவதற்காக சென்றனர்.
அப்போது வீட்டில் கொசுக்கள் அதிகமாக இருந்ததால், கொசுவத்தியை பற்ற வைத்துவிட்டு அவர்கள் உறங்கியுள்ளனர். இந்நிலையில், மகேஸ்வரி மருத்துவமனையில் இருந்து தனது குழந்தையுடன் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டின் பூட்டை திறந்ததும் முழுவதும் தீ எரிந்தபடி கரும்புகை சூழ்ந்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மறைமலைநகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அப்போது உடல் கருகிய நிலையில், பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, 2 வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோரின் உடல்களை தீயணைப்புப்படையினர் மீட்டனர். குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் அவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீயில் உருக்குலைந்து போன அறை
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட விசாரணையில், கொசுவத்தியின் கங்கு, அருகில் இருந்த துணிகளின் மீது பற்றி தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடமும், அவரது சகோதரி குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாதாரண கொசுவத்தியால் ஒரு குடும்பமே உருத்தெரியாமல் சிதைந்து போன சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியைும் ஏற்படுத்தியுள்ளது.

