ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்குடைய காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் அதிமுக, திமுக கட்சிகளே ஆட்சியை பிடித்து வருகின்றன.
ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் நடிகராக இருந்த விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கியுள்ளது தான். அது மட்டுமின்றி, 2026 தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என விஜய் அறைகூவல் விடுத்தார்.
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஒவ்வொரு கட்சிக்கும் நோக்கம் இருக்கிறது. அந்த வகையில், கோரிக்கை என்பது இயல்பானது. விசிக தொடங்கிய காலத்தில் இருந்தே ஆட்சியில் அதிகாரம் என்பது எங்களது கோரிக்கைகளில் ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்துவதற்கான சூழல் தமிழகத்தில் இருக்கிறதா? என்றால், அனுபவப்பூர்வமாக இல்லை என உணர்ந்திருக்கிறோம்.
இது போன்ற சூழலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கிவிடக் கூடாது என்பதிலும், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு, வலதுசாரிக்கு வாய்ப்புகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் நாங்கள் கவனமாக உள்ளோம். அதற்காக, விசிக அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால், அந்த கோரிக்கையை நாங்கள் கைவிடவும் இல்லை.
அதே சமயம், காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரம் கேட்பது அவர்களது உரிமை. இதன் மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிரணியினர் நம்புகிறார்கள். ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை காண்பார்கள். திமுக தலைமையிலான கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலூரில் வரும் 23-ம் தேதி விஜய் பொதுக்கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்
மேலும் பேசிய திருமாவளவன், “பாஜக வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்கலாம். ஆனால், பாஜக என்ன சூழ்ச்சி செய்து சதித் திட்டங்கள் தீட்டினாலும், அவர்களால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது. தமிழ்நாடு வேறுபட்ட மண் என பாஜகவினர் மீண்டும் உணர்வார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஆட்சியை திமுக வழங்கியுள்ளது. ஆனால், பாஜக அரசு மற்றும் அதன் தலைவர்கள், நிதி தராமல் நெருக்கடிகளை மட்டுமே தந்தார்கள். நெருக்கடிகளை தாக்குப் பிடித்து, திமுக பல திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிதி நெருக்கடி இருந்தும், சதியை முறியடிக்கும் வண்ணம் முதலமைச்சர் மகளிருக்கு ரூ.5000 வழங்கியுள்ளார். ஆனால், பாஜக வயிற்றெரிச்சலில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் உணர்ந்துள்ள மக்கள், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்“ என்று கூறினார்.

