சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நியமனம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தி.மு.க – வி.சி.க இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவரும் நிலையில், சென்னை கோயம்பேடு தனியார் விடுதியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிற விசிகவின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இரட்டை இலக்கத்தில்’ தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
வருவாய் மாவட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், வி.சி.க அதனின்று மாறுபட்டு 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ‘தொகுதி மாவட்டங்களாக’ அறிவித்துள்ளது. இது அரசியலரங்கில் முதல் முறையாக வி.சி.க முன்னெடுத்துள்ள அரிய முயற்சியாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த கட்சியாகவும் வி.சி.க வலுப்பெற்றுள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் அநீதியானப் போரை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டங்களுக்கு மாறாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின்மீது குண்டுவீசி சுமார் 168 குழந்தைகளை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது. இது போர்க்குற்றமாகும். எனவே, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமெரிக்க அதிபரைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
ஈரான் மீது நடந்துவரும் போரின் காரணமாக, உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முழுமூச்சாகப் பாடுபட வேண்டும்.
சிறு வணிகர்கள் தமது அன்றாடக் கொள்முதலுக்காக எடுத்துச்செல்லும் சிறு சிறு தொகைகளைக்கூட தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே சிதைப்பதாக உள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு நெருக்கடி இல்லை. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் இருக்க உரிய அறிவுறுத்தலை மாநிலத் தேர்தல் அதிகாரி (CEO) வழங்க வேண்டும்.
இந்நிலையில், தி.மு.க உடனான கூட்டணி பங்கீட்டின் முடிவில் வி.சி.க-வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். முன்னதாக, தொகுதிகள் சற்று குறைந்தாலும், தி.மு.க-வுடன் இணைந்து ‘இந்த தேர்தலில் பயணிப்போம்’ என வி.சி.க உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.

