தற்போது இந்த நான்கு அடுக்கு GST முறையை இரண்டு அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
அதே நேரத்தில் சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கும், சொகுசு கார், குளிர் பானங்கள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.
இந்த வரி குறைப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய GST குறைப்பு வருகிற 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், “முன்பு 4 வகைகளாக இருந்த GST வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த GST வரி குறைப்பு இந்தியாவின் 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு 12 சதவிதமாகவும், 18 சதவீதமாகவும் இருந்த பொருட்களின் வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பொருட்களின் வரி பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முற்றிலுமாக வரி நீக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த GST வரி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தென்மாநிலங்களில் நாம் தீபாவளிக்கு முன்பாக புதிய துணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவோம். ஆனால் வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையை முன்னிட்டு வீட்டிற்கு நிறைய பொருட்கள் வாங்குவார்கள்.
எனவே, அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருக்கக் கூடிய GST கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பண்டிகைகளையும் மனதில் வைத்துக் கொண்டு முன்கூட்டியே GST வரி சீர்திருத்தத்தை அறிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

