இந்தியா இப்போது உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்களை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பான பகிர்ந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ‘ஜியோ-பிளாக்ராக்’ (Jio-BlackRock) உரையாடல் நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் ஆகியோர் வர்த்தகம் சார்ந்த ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது- இந்தியா எனும் மரம் இன்று அதிக அளவிலான கனிகளைத் தரத் தொடங்கியுள்ளது; அதனால்தான் இன்று உலகம் முழுவதையும் அது தன் பக்கம் ஈர்க்கிறது. கடந்த 10-15 ஆண்டுகால நிலையான தலைமை மற்றும் பிரதமர் மோடியின் தெளிவான நிர்வாகமே இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது.
இந்தியா இப்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு; 8 முதல் 10% வளர்ச்சி விகிதம் என்பது நமக்குச் சாத்தியமானதுதான். வருங்காலங்களில் இந்தியப் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதைக் கூட யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
2047-க்குள் ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதில் ஒவ்வொரு இந்தியனும் இன்று முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் நாம் மேற்கொண்டு வரும் பிரம்மாண்டமான திட்டங்களே இந்தியாவின் பலத்திற்குச் சான்று. இந்தியா இப்போது உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையப்புள்ளியாக மாறியுள்ளது; இதற்கு நமது தொடர்ச்சியான கொள்கை முடிவுகளே காரணம். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய லாரி ஃபிங்க் இந்தியாவின் சகாப்தம்” என்று வர்ணித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது- இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.
குறிப்பாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது. ஒரு சிறந்த முதலீட்டாளரின் பணி ஒவ்வொரு சந்தை சலசலப்பிற்கும் எதிர்வினையாற்றுவது அல்ல. மாறாக நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து நிலைத்திருப்பதே ஆகும். என்று தெரிவித்தார்.

