“என்னுடைய வசனத்தை விஜய் பேசக் கூடாது. யாரோ எழுதி தருவதை பேசி சென்று விடக் கூடாது. பேசினால் கேள்விகள் வரும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்தார்.
சென்னை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் திமுகவுக்கு தான் இருக்கிறது. அப்படியிருக்கையில், நீட் தேர்வுக்கான பயிற்சியை அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் அளிக்கப் போகிறது என சொல்வதில் என்ன நியாயம் உள்ளது? நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது அமெரிக்க நிறுவனமாம். ஆனால், நீட் தேர்ச்சி பெற்று வந்தால் பாடம் நடத்துபவர்கள் பழைய மருத்துவ மாணவர்களாம். என்ன கொடுமை இது?
தமிழ்நாடு ஒவ்வொரு நாளும் போராட்ட களமாக மாறிக் கொண்டே வருகிறது. ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இப்படி இருக்கையில், எப்படி திமுகவினர் நல்லாட்சி நடத்தினார்கள் என்று கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் அரசியல் வருகையால் தான் திமுக பெண்களுக்கு பணம் போட்டதா? என்று கேட்டதற்கு, “பீகாரில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தது. இங்கும் விஜய் அரசியலுக்கு வந்ததால் தான் பயந்து போடப்பட்டதாக அவர் நினைத்துக் கொள்கிறார். அரசு நிதியுதவி தருவதை வழக்கமாக வைத்துள்ளது.
விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்? நான் வந்தால் ஆட்சி முறையை மாற்றுவேன். விஜய் என்ன செய்வார் என்று அவரால் சொல்ல முடியுமா? யார் வேண்டுமானாலும் குறை சொல்லலாம். ஆனால், எது சரி என்று சொல்வதற்குதான் ஒரு தலைவன் தேவை.
விஜய் ஆட்சி அமைத்து, அடுத்த முறை அதிகாரத்தில் பங்கு என்று அழைத்தால் எல்லாரும் போவார்கள். அதேபோல தான் திமுக, அதிமுக அழைத்தாலும் செல்வார்கள். விஜய்காந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது என்றால், 10 சதவீத வாக்கு அவருக்கு இருந்தது. எங்கள் கூட்டணிக்கு வரக் கூடியவர்கள் எங்களின் கொள்கை – கோட்பாடுகளை ஏற்க வேண்டும். அப்போது தான் சரியாக இருக்கும். சும்மா கூட்டத்தை சேர்த்துக் கொண்டு நிற்பதில்லை” என்றார்.
அவரிடம் விஜய் கூட்டணிக்கு அழைத்தாரா? என்று கேட்டதற்கு, “விஜய் என்னை ஏன் கூட்டணிக்கு அழைக்க வேண்டும்? வயதில் என்னை விட 8 வயது சின்னவர். எல்லாவற்றிலும் நான் தான் மூத்தவன். என்னுடன் தான் விஜய் வர வேண்டும். நான் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் கழித்த தான் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்.
விஜய்க்கு எச்சரிக்கை
அண்ணா ஆரம்பித்த கட்சி ஸ்டாலினிடமும், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி எடப்பாடியிடமும் இருக்கிறது. தனித்து கட்சி ஆரம்பித்தவன் நான் என்று சேலத்தில் விஜய் பேசியிருக்கிறார். அது என்னுடைய வசனம். என்னுடைய வசனத்தை விஜய் பேசக் கூடாது. யாரோ எழுதி தருவதை பேசி சென்று விடக் கூடாது. இனி விஜய் என்னுடைய வசனங்களை பேசினால் கேள்விகள் வரும்” என்று சீமான் கூறினார்.

