சர்வதேச அளவில் கடல்மட்டம் அதிகரிப்பு ஏற்கெனவே அனுமானிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் உயர்ந்திருப்பதாக புதிய ஆராய்ச்சியில் வெளியான தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நெதர்லாந்தில் உள்ள வேகனிங்கன் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கேதரினா சீஜர், பிலிப் மின்டர்ஹவுட் ஆகிய இருவரும், ‘நேச்சர்’ பத்திரிகையில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதை அளவிடுவதில் ஒரு துல்லியமற்ற முறை பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் கடலோரப் பகுதியில், கடல் நீர்மட்டம் உயர்வதை அளவிடுவதில் ஒரு முறைப்படுத்தப்பட்ட தவறு நடப்பதை அந்த ஆய்வில் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடல் நீர்மட்டம் உயர்வதை அளவிடும்போது, 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் நேரடியாக அளவிடப்படுவதில்லை.
அதாவது, சர்வதேச அளவில் கடல் நீர்மட்டம் உயர்வை அளக்கும்போது, புவியீர்ப்பு விசை, புவியின் சுழற்சி ஆகியவற்றை வைத்து மதிப்பிட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, பூமியில் இருந்து எவ்வளவு உயரம் அதிகரித்துள்ளது என்றே மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக, விண்வெளி சார்ந்த மதிப்பீடுகளை வைத்து அளக்கும்போது, பல மீட்டர்கள் வரை பிழையாக மதிப்பிடக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் கடல்நீர் மட்டம் முன்பு கருதப்பட்டதை விட மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது. இது, புவிவெப்பமாதலின் எதிர்கால தாக்கங்களை மதிப்பிடுவதிலும், உலகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் நிலையை புரிந்துகொள்வதிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சர்வதேச அளவில், கடல்நீர்மட்டம் முன்பு இருந்ததை விட 30 சென்டிமீட்டர் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் 100 செ.மீ. முதல் 150 செ.மீ. வரை உயர்ந்திருக்க கூடும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும் கடல்நீர் மட்டம் ஏற்கெனவே கணித்ததைவிட அதிகமாக உயர்ந்திருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து பேராசிரியர் பிலிப் மின்டர்ஹவுட் கூறுகையில், “உண்மையில் கடல்நீர் மட்டமானது, கடல் காற்று, கடல் நீரோட்டம், கடல்நீரின் வெப்பநிலை, கடல்நீரின் உப்புத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், கடல்நீர் மட்டும் குறைவாக மதிப்பிடப்பட்டது.
கடந்த 2009 முதல் 2025வரை வெளியிடப்பட்டு, சக ஆய்வாளர்களால் மறு ஆய்வு செய்யப்பட்ட 385 அறிவியல் ஆவணங்களை பகுப்பாய்வு செய்து, இந்த கடல்நீர்மட்டம் மதிப்பிடுவதில் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடல்நீர்மட்டம் அதிகரிப்பது, உலகம் முழுவதும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. வரும் 2100ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 28 முதல் 100 செ.மீ. வரை அதிகரிக்க கூடும் என்று ஐ.நா.வின் நாடுகளுக்கு இடையேயான பருவநிலை மாற்றக்குழு மதிப்பிட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே கணித்ததை விட அதிக அளவு கடல்நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது” என்று அவர் தெரிவிக்கிறார்.
இதனால், தாழ்வான பகுதியில் உள்ள நாடுகள், கடலோர பகுதிகளில் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகள், விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. குறிப்பாக, கடல்மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால் 37 சதவீத நிலப்பகுதி கடலுக்குள் சென்று விடும். இதனால், உலகம் முழுவதும் 13.2 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, கடல்நீர்மட்டம் உயர்வதை புதிய முறையின்படி அளவிட வேண்டும்.
குறிப்பாக, இந்தியா போன்ற கடலோரப் பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளும், அந்தமான்-நிகோபர், லட்சத்தீவுகள் போன்ற தாழ்வான தீவுகளும், கடல்நீரின் ஆக்கிரமிப்புக்கு எளிதில் இலக்காகி விடும். எனவே, கடல்நீர் ஆக்கிரமிப்புக்கு இணங்கிப்போகும் சூழல் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, கடல்நீர் நம்மை விழுங்கும் முன், அதற்கு முடிவுகட்ட சர்வதேச அளவில் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.

