2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் எனக் கூறி வந்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியின் எச்சரிக்கைக்கு பணிந்துள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதனிடையே, வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது.
பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐசிசி, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அடுக்கடுக்கான எச்சரிக்கைகளை விடுத்தது. இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால், பாகிஸ்தான் அணிக்கு ஆண்டு நிதி பகிர்வில் 20 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும் என்றும், சர்வதேச தொடர்களில் பங்கேற்க அந்நாட்டு அணிக்கு ஓராண்டு தடைவிதிக்கப்படும் எனவும் ஐசிசி எச்சரித்தது. மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்தது.
ஐசிசியின் இந்த எச்சரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் அரசு, தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அந்நாட்டு அணி விளையாடும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐசிசியின் எச்சரிக்கையை அடுத்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதின. அதில், கிரிக்கெட் நலனுக்காக இந்தியாவுடன் விளையாடுமாறு அந்நாடுகள் கேட்டுக்கொண்டன.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் லாகூரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில் ஐசிசி விடுத்த எச்சரிக்கை குறித்தும், போட்டியை புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை சந்தித்து, மொர்சின் நக்வி விளக்கினார்.
இவ்வாறு அடுத்தடுத்து வந்த சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரை வங்கதேச அணி புறக்கணித்த நிலையில், அதற்கும் ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்தது. பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், வங்கதேசம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஐசிசி தெரிவித்தது.

