தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது! தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகிறார்கள்! என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடி இருந்தாலும், மலைக்கோட்டை விநாயகப் பெருமான், சமயபுரம் மாரியம்மன், மருது பாண்டியர்கள், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் உள்ளிட்ட திருச்சியின் பெருமைமிகு அடையாளங்களை அவர் நினைவுகூர்ந்து பேசியது நெகிழ வைத்தது.
“மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என்னும் திமுகவின் புளித்துப் போன பொய்யைத் தோலுரிக்கும் விதமாக, கடந்த பத்தாண்டுகளில் UPA காலத்தில் இருந்ததை விடப் பன்மடங்கு அதிகமான நிதியைப் பாஜக அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளதையும், மாநிலத்தின் மிகப் பழமையான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தியுள்ளதையும், இன்று கூட திருச்சியில் சுமார் ரூ.5,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தாம் அடிக்கல் நாட்டியதையும் குறிப்பிட்டார் நமது பிரதமர் மோடி.
அதுமட்டுமன்றி, சில நாட்களுக்கு முன்பு தான் சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடிய நிலையில், 32 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகளைக் கொண்ட ஜன்தன் வங்கிக் கணக்குகள் திட்டம், பெண் தொழில் முனைவோர்களுக்கு இதுவரை ரூ.16 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியுதவி அளித்துள்ள முத்ரா கடனுதவித் திட்டம், பெண்களின் பெயரில் சுமார் 3 கோடி வீடுகளை இலவசமாகக் கட்டிக் கொடுத்த பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றையும் மக்களுக்கு எடுத்துக் கூறிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய தமது தலைமையிலான மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றியதையும் கர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும், தமிழகத்திற்கு இத்தனை நலத்திட்டங்களை வாரிக் கொடுக்கும் மத்திய அரசை வாய் ஓயாமல் குறை கூறிக் கொண்டிருக்கும் திமுகவின் அவல ஆட்சியில், இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதமாக அரசு வேலைகளைத் திமுக விற்பதையும், தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டாமலும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தாமலும் விவசாயிகளைத் திமுக அரசு வஞ்சிப்பதையும், பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களைத் திமுக ஏமாற்றுவதையும் ஆதாரங்களுடன் அவர் விளக்கிய பொழுது தமிழக மக்கள் அனைவருக்கும் திமுகவின் பச்சை துரோகம் கண்முன்னே வந்து நிழலாடியது.
முக்கியமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகியின் பாலியல் வெறிக்கு பலியான இரண்டு வயது சிறுமியை வேதனையுடன் நினைவு கூர்ந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், NDA-வின் ஆட்சி அமைந்தவுடன், லைசென்ஸ் வாங்கிய குற்றவாளிகள் போலத் திரியும் திமுககாரர்களை அடக்கி, சட்டம் ஒழுங்கை முறையாகச் சீர்படுத்தி, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை அழுத்தமான வாக்குறுதியாக அளித்தார்.
NDA-வின் சீர்மிகு ஆட்சியில் குற்றவாளிகள் தான் பயத்தில் வாழ்வார்கள், தமிழகப் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற நமது மாண்புமிகு பாரதப் பிரதமரின் நம்பிக்கையான கர்ஜனை, நொடிந்து போன தமிழகப் பெண்களுக்கு புதுத்தெம்பினை அளித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
திமுக எனும் குடும்பக் கட்சியில், எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால், அதிகாரம் ஒரு குடும்பத்தின் கைகளில் மட்டுமே எப்பொழுதும் இருக்கும் என்பதையும், நதிகள் கடலில் சேர்வதைப் போல, திமுகவின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தையே சென்று சேர்வதையும் கோடிட்டுக் காட்டிக் கொந்தளித்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழலையும் வாரிசு அரசியலையும் அடிப்படையாகக் கொண்ட திமுக அடியோடு அழிக்கப்படும் என சூளுரைத்தார்.
அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து தமிழகத்தை எப்பொழுதும் தாயுள்ளத்துடன் அணுகும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வாக்கிற்கேற்ப, நாம் அனைவரும் இணைந்து வளமான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

