சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு தமிழக பாஜக சார்பாக சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்குத் தங்களது குலவிளக்கைப் பலி கொடுத்து விட்டு தவிக்கும் அக்குடும்பத்தாரின் கண்ணீர் முகம் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. குற்றம் நடந்து பல நாட்கள் கடந்து விட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக தெருவில் இறங்கி போராடிய பிறகும் கூட அறிவாலயத்தின் ஏவல்துறை இவ்வழக்கில் இன்னும் ஒரு குற்றவாளியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்பது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கே வெட்கக்கேடு.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்!
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

