உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நமது பிரதமர் மோடி தொடர்ந்து கெளரவிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இஸ்ரேல் அரசுக்கு பிரதமர் மோடிக்கு அளித்த விருது தொடர்பான படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு, இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான “ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட்” பதக்கம் வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் சென்றபோது, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்’ விருது வழங்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாடாளுமன்ற விருது மூலம், பகை நாடுகளாகக் கருதப்படும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலகத் தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படி, உலக நாடுகள் அனைத்துடனும் நட்பு பாராட்டி, அவற்றின் பெரு நம்பிக்கையைப் பெற்று, உலக அரங்கில் பெரிதும் கௌரவிக்கப்படும் நமது மாண்புமிகு பிரதமர் அவர்களை விஸ்வகுரு என்றழைப்பது மிகப் பொருத்தமானதே!
இவ்வாறு அந்த பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

