தமிழகத்தில் தற்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.
பாஜக மகளிரணி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் மகளிர் அணிகள் சார்பாக திமுக அரசை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன், பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு, “மக்களை பாதுகாப்பதற்காக இருக்கிறோம் என திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்கள் முன்னேறினால்தான் ஒரு நாடு முன்னேறும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காக கொண்டுவந்த ஏதாவது ஒரு திட்டத்தையாவது இப்போது திமுக செயல்படுத்துகிறதா? எனவே, பெண்கள் நலன் காப்பதற்காக, எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” என்றார்.
முன்னதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், “தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. ஏனென்றால், இங்கு ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்கிறார்கள். அதனால் மாற்றத்தை விரும்புகிறார்கள். பெண் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வீட்டுக்கு திரும்பி வரும் வரையில், பெற்றோர்கள் ஒருவித பயத்துடனேயே இருக்கிறார்கள்.
திமுக ஆட்சி என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை நாம் அகற்ற வேண்டும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக நாம் அமர வைக்க வேண்டும்” என வானதி சீனிவாசன் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பெண்களுக்காக என்ன உருப்படியான திட்டங்களை கொண்டு வந்துள்ளது? தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவுக்கு மக்கள் ஞாபகம் வரும். புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது தெளிவாக தெரியும்” என குஷ்பு கூறினார்.

