நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில், சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்தபடி வந்த 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் தென்பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சாய்த்தனர். மேலும், பெரும்பத்து பகுதியில் கணேசன் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் புகுந்து, அங்கு டீ குடித்த நபர்களையும் அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியது.
அதில் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளி டிரானத் கட்டா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜான், டிரானத் கட்டா குடும்பத்தினரையும், மருத்துவமனையில் உள்ள நபர்களையும் அரசியல் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இச்சம்பவத்தின் பின்னணியில் சாதி ரீதியான பகை இருப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேசமயம் மது மற்றும் கஞ்சா போதையில் தான் இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, வன்முறை மற்றும் தீண்டாமை அதிகமாக நடைபெற்று வரும் நெல்லை மாநகரில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவமும், சாதி ரீதியான தாக்குதலாக இருக்கும் என்ற கோணத்தில் மாவட்ட போலீசார் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பக்கூடாது, பிரச்சனைக்குரிய கருத்துகளை பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பதற்றம் நிலவி வருவதால் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களை கண்காணித்து வரும் போலீசார், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வகையில், சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரை வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட ஆறுமுகம் (63) மற்றும் முத்துக்குமார் (27) இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதேபோல, நாங்குநேரி சம்பவத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்டதாக விஜயநாராயணம், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பு, மானூர், திருக்குறுங்குடி ஆகிய 6 காவல் நிலையங்களில் என மொத்தம் 11 வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வார்னிங் கொடுத்தும், அதனை மீறி வீடியோ பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, நாங்குநேரி கொலை சம்பவத்தில் 9 பேர் கொண்ட கும்பலில் கண்ணன், அந்தோணி மைக்கேல், ராஜா, வசந்தகுமார், உச்சிமாகாளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இருவரின் பெயர் விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

