டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டர் பேட்டர் ஜேக்கப் பெத்தெல் 45 பந்துகளில் சதம் விளாசியதுடன், 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 105 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தவிர்த்து மற்ற இங்கிலாந்து வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறியதால், 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்ததுடன், இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.
ரன் மழை
அதன்படி, இந்தியா-இங்கிலாந்து போட்டியில் மொத்தமாக 499 ரன்கள் குவிக்கப்பட்டது, இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2016 டி20 உலகக் கோப்பை போட்டியில் 459 ரன்கள் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இப்போட்டி அதனை முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 19 சிக்ஸர்களையும், இங்கிலாந்து வீரர்கள் 15 சிக்ஸர்களையும் அடித்தனர். ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் இவ்வளவு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 73 பவுண்டரிகளை (39 பவுண்டரிகள் மற்றும் 34 சிக்ஸர்கள்) அடித்துள்ளனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட போட்டியாகவும் இது மாறியுள்ளது.
சதம் விளாசிய பெத்தெல்
இந்த அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டர் ஜேக்கப் பெத்தேல் 105 ரன்களை விளாசியதன் மூலம், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் அவர் நியூசிலாந்தின் ஃபின் ஆலன் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் ஃபின் ஆலன் 100 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைய்ம் அவர் பெற்றுள்ளார்.
சிக்ஸர் நாயகன் சஞ்சு சாம்சன்
இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 7 சிக்ஸர்களை விளாசி அசத்தி இருந்தார். இதன் மூலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் மொத்தமாக 16 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 15 சிக்ஸர்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
மற்ற சாதனைகள்
இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவானது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா 250 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்தது இது ஐந்தாவது முறையாகும். மேலும் இந்த சீசனில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 88 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாறையும் படைத்து.
இதனையடுத்து மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

