டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் ஹபீஸ் சையது? வீடியோ வந்த சில நாட்களில் நடந்த சம்பவம்!
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதியின் சமீபத்திய வீடியோ வெளியான நிலையில், வங்கதேசத்தை தளமாகக் கொண்ட செயல்பாட்டாளர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது செங்கோட்டை குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கை இருக்கிறதா என்ற சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.
நேற்று ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஆகியவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று ஃபரீதாபாத்தில் பிடிபட்டது. மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பயங்கரவாத குழுவினர் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து 15 நாட்கள் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் நடந்தன.
கைது செய்யப்பட்டவர்களில் ஃபரிதாபாத்தில் கண்காணிக்கப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசாமில் கனாயி மற்றும் விசாரணைக்காக ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் ஆகியோர் அடங்குவர்.
அவரது காரில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மீட்கப்பட்ட வெடிபொருட்களில் சுமார் 2,900 கிலோ எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர் ஆகியவை இருந்தன.
ஃபரிதாபாத்தில் உள்ள கணாயியின் வாடகை வீட்டில் சுமார் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் என நம்பப்படும் எளிதில் எரியக்கூடிய பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே நேற்று (திங்கட்கிழமை) மாலை கார் ஒன்று வெடித்தது.
சிக்னல் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்தது. இதன் காரணமாக அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.
செங்கோட்டை குண்டுவெடிப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதையும் அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை.
எல்என்ஜேபி மருத்துவமனையில் இருந்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர், “நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை நடத்துவோம்.” என்றார்.
அக்டோபர் 30 அன்று பாகிஸ்தானின் கைர்பூர் தமேவாலியில் நடைபெற்ற பேரணியின் காணொளியில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா சைஃப், “ஹபீஸ் சயீத் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை; அவர் வங்கதேசம் வழியாக இந்தியாவைத் தாக்கத் தயாராகி விட்டார்” என்று அறிவித்தார்.
LeT செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் சைஃப் கூறினார்.
லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனரும் ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹபீஸ் சயீத், பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்.
ஜிஹாத் என்ற பெயரில், இந்திய எல்லையோரம் உள்ள வங்கதேசப் பகுதியில், அந்நாட்டு இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சிகளை அளித்து, அங்கிருந்து இந்தியா மீது தாக்குதல்களை நடத்த சயீத் திட்டமிட்டு வருவதாகவும் சயீப் பேசி இருந்தார்.
இந்நிலையில் தான், டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் கை இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதில் பயங்கரவாத சதி நடவடிக்கைகள் இருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

