தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் தொடங்கியது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்காகவும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன் மூலம் இதுவரை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் இதுவரை 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ”உச்ச நீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/ 2025 வழக்குகளில் கடந்த 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகள் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 30.01.2026 அன்று “முரண்பாடுகள்” (Logical Discrepancies) என்கின்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுகா/ துணை பிரிவு அலுவலகங்கள், நகர்ப்புற பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும் இந்த முரண்பாடுகள் பிரிவால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களுடைய ஆவணங்களை / மறுப்புரைகளை நேரில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி முரண்பாடு பட்டியல் வெளியிடப்பட்டு அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23.02.2026 அன்று வெளியிடப்படும்.” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (பிப்ரவரி 17 ஆம் தேதி) வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிப்.23 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

