தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த S.I.R. பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி அன்று தொடங்கியது.
வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை தேர்தல் அலுவலர்கள் வருகிற டிசம்பர் 4ம்தேதி வரை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஒரு மாதத்துக்குள் எப்படி 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சென்று சரி பார்க்க முடியும்? என்று கேள்வி எழுந்தது.
அதன்படி இன்னும் பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் ஆன்லைன் மூலம் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்னை பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழையலாம்.
இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் OTP அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன்பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் கணக்கீட்டு படிவம் (Fill Enumeration Form) என்ற இணைப்பை தேர்வு செய்யலாம்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது ‘e-sign’ பக்கத்திற்கு மாறும்.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு முறை OTP எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டவுடன் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

