துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவின்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தவெகவினரை அடையாளம் கண்டு, அவர்களை தேர்தல் அன்று பூத்திற்கு அழைத்துவந்து வாக்களிக்க வைக்க வேண்டியது தவெக நிர்வாகிகளின் பொறுப்பு என்றும் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப். 10) தவெக நிர்வாகிகளான பவானி, திலீப், முகேஷ் பாண்டி, ரகுமான், ஜாபர் ஆகியோர் பகுதிச் செயலாளர் உதயகுமார் தலைமையில் சென்னை துறைமுகம் தொகுதி 60-வது வார்டு பகுதியில் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனை பார்த்த திமுக நிர்வாகிகள், “எப்படி எங்கள் பகுதியில் வந்து கள ஆய்வில் ஈடுபடலாம்” என கேட்டு தவெகவினரை தாக்கியுதாக கூறப்படுகிறது.
இதில் கர்ப்பிணியான பவானி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தவெக மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அவர்கள் கூறுகையில், “தேர்தல் பணிக்காக எங்களுடைய நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். இதனையறிந்த அமைச்சர் சேகர் பாபு, சில திமுக ரவுடிகளை ஏவி எங்களுடைய நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
இதில் காயமடைந்த 6 பேரில் இருவர் ஐசியுவிலும், மற்ற 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் எங்களுடைய நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறார். இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவி, எங்களுடைய நிர்வாகிகளை சுற்றி வளைத்து தாக்கியுள்ளார்.
துறைமுகம் தொகுதியில் திமுகவின் மாடல் இதுதான். தேர்தலில் தோல்வி பயத்தில் சேகர் பாபு இவ்வாறு செய்துவருகிறார். ஆனால் இதனால் நாங்கள் தொய்வடையாமல் இன்னும் எங்களின் வேகத்தை அதிகப்படுத்துவோம். இந்த தொகுதியில் சேகர் பாபுவை தோற்கடிக்கும் வரையில் ஓய மாட்டோம்” என்றார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் மனைவி கூறுகையில், “என் கணவரின் தலையில் பலமான அடித்ததன் விளைவாக அவருக்கு 2 முறை வலிப்பு வந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். இதுகுறித்து புகாரளித்தும் காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே நாங்கள் உயர் நீதிமன்றத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி மனு அளித்திருக்கிறோம்” என்றார்.
இந்நிலையில், தவெகவினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த விஜய், இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சென்னை, பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என விஜய் கூறியுள்ளார்.

