ரியல் மேட்ரிட், அர்செனல் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் புகழ் பெற்ற கால்பந்து தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றைய தினம் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் மான்செஸ்டர் சிட்டி அணியானது ரியல் மேட்ரிட் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.
காலிறுதியில் மேட்ரிட்
இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணியும் கோலடிக்க முயற்சிக்க ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. அதன்பின் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ரியல் மேட்ரிட் அணிக்காக வினிசியஸ் ஜூனியர் கோலடித்து அசத்தினார். அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய மான்செஸ்டர் சிட்டி அணிக்கு ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் கோலடித்து மிரட்டினார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் கோலடிக்க கடுமையாக போராடினர். இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மீண்டும் கோலடிக்க, மறுபக்கம் இறுதிவரை போராடிய மான்செஸ்டர் சிட்டி அணியால் மேற்கொண்டு கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் ரியல் மேட்ரிட் அணி 2-1என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
அர்செனல், பிஎஸ்ஜி அசத்தல்
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் மற்றும் லெவர்குசன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்செனல் அணிக்கு ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் எபெரேச்சி எசேவும், ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் டெக்லான் ரைஸும் கோல்களை பதிவு செய்தனர். மறுபக்கம் இறுதிவரை போராடிய லெவர்குசன் அணி கோல்களை அடிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் அர்செனல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அபாரமாக செயல்பட்ட பிஎஸ்ஜி அணிக்கு ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் கிவிச்சா கிவாராட்ஸ்கேலியாவும், ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும், ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் செனி மயுலுவும் கோலடித்து அசத்தினர். மறுபக்கம் செல்சி அணி வீரர்களால் எதிரணியின் டிஃபென்ஸை தாண்டி ஒரு கோல் கூட பதிவு செய்ய முடிவில்லை.
சிஎஸ்கே அணியில் நடந்த அதிரடி மாற்றம்: முன்னாள் இங்கிலாந்து வீரருக்கு முக்கிய பொறுப்பு
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச்சுற்றுக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியானது முன்னேறி அசத்தியுள்ளது. இதனையடுத்து இத்தொடரின் காலிறுதி போட்டிகள் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

