தேர்தல் நடத்தை அமல்படுத்தப்பட்டது முதலாக, தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலத்தில் அமலாகியுள்ளது. இதனால் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல கோடி மதிப்பிலான பணமும், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அமலாக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வலுவான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது. அதன்படி, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடுதல், அனுமதியின்றி காட்சிப்படுத்தப்படும் கட்சி விளம்பரங்களை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கிய இடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் 2,166 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர கவர்ச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க இக்குழுக்கள் வாகனங்கள் மற்றும் தனிநபர்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சோதனைகளின் மூலமாக இதுவரை ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

