இன்றைய உலகில், உடல் ஆரோக்கியத்தை காக்க நாம் காட்டும் ஆர்வம், நம் மூளையின் ஆரோக்கியத்தை பேணுவதில் இருப்பதில்லை. முதுமை என்று வரும்போது நம்மில் பலரை அச்சுறுத்தும் ஒரு விஷயம் ‘மறதி’. வயது ஏற ஏற ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு என்று நாம் கடந்து போகிறோம்.
ஆனால், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் மிக சாதாரணமான சில செயல்கள் புத்தகம் வாசிப்பது, டைரி எழுதுவது அல்லது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, நமது மூளையை பாதுகாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்சைமர் (Alzheimer’s) எனப்படும் தீவிர ஞாபக மறதி நோய், இன்று உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இதற்கு தீர்வு தேடி ஆராய்ச்சியாளர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “தொடர் கற்றல்” என்ற எளிய மருந்தை கண்டறிந்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் தொடங்கி, முதுமை வரை நாம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் காட்டும் ஆர்வம், நம் மூளையின் ஆயுளைக் கூட்டுகிறது.
அந்த வகையில், உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அரை மணி நேரம் வாசிப்புக்காகவோ அல்லது ஒரு புதிய மொழியின் சில வார்த்தைகளை கற்பதற்காகவோ ஒதுக்கினால், அது உங்கள் முதுமையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த புதிய ஆய்வு.
வாசிப்பு, எழுத்து: சமீபத்திய ஆய்வின்படி, புத்தகம் வாசிப்பது, எழுதுவது மற்றும் புதிய மொழிகளை கற்றுக்கொள்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது அல்சைமர் நோய் மற்றும் மூளைத் திறன் குறைபாட்டைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இத்தகைய அறிவுசார் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதி நோய் ஏற்படும் அபாயம் சுமார் 40% வரை குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது டிமென்ஷியா என்பது உலகின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 15 கோடிக்கும் மேலாக, அதாவது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது எதிர்கால சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியா ஜாமிட் தலைமையிலான குழு, சுமார் 1,939 நபர்களைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு தொடங்கும்போது இவர்களுக்கு சராசரி வயது 80. இவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு இல்லை. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு இவர்களது வாழ்க்கை முறை கண்காணிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய அறிவுசார் தேடல்: இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களின் மூன்று முக்கிய வாழ்க்கை நிலைகளில் இருந்த கற்றல் பழக்கவழக்கங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டனர்,
18 வயதுக்கு முன்: சிறுவயதில் பெற்றோர் கதை படித்துக் காட்டியது, செய்தித்தாள்கள் மற்றும் நிலவரைபடங்களை (Atlas) வாசிப்பது, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேற்று மொழியை கற்றது.
40 வயது வரை: வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பது, நூலக உறுப்பினராக இருப்பது, அருங்காட்சியகம் அல்லது பொது நூலகங்களுக்குச் செல்லும் பழக்கம்.
80 வயதிற்கு மேல்: தொடர்ந்து வாசிப்பது, எழுதுவது மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடுவது.
ஆய்வு முடிவில், அறிவுசார் செயல்பாடுகளில் மிக அதிகமாக (டாப் 10%) ஈடுபட்டவர்களில் 21% பேருக்கு மட்டுமே அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இத்தகைய பழக்கங்கள் மிகக் குறைவாக இருந்தவர்களில் 34% பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
வயது, பாலினம் மற்றும் கல்வித் தகுதி போன்ற காரணிகளைச் சரிசெய்த பிறகு, வாழ்நாள் முழுவதும் இத்தகைய ஈடுபாட்டுடன் இருந்தவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் 38% குறைவாகவும், லேசான அறிவாற்றல் குறைபாடு (MCI) ஏற்படும் அபாயம் 36% குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
கால தாமதமும் மூளைப் பாதுகாப்பும்: ஆய்வில், அறிவுசார் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டியவர்களுக்கு அல்சைமர் நோய் சராசரியாக 94 வயதில் தான் ஏற்பட்டது. அதே சமயம், அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு சராசரியாக 88 வயதிலேயே பாதிப்பு வந்தது. அதாவது, வாசிப்பும் கற்றலும் இந்த நோயை 5 ஆண்டுகள் வரை தள்ளிப்போட உதவுகிறது.
அதேபோல, லேசான அறிவாற்றல் குறைபாடு ஏற்படும் காலமும் 78 வயதிலிருந்து 85 வயதாக, அதாவது 7 ஆண்டுகள் தள்ளிப்போனது ஆய்வில் உறுதியானது.
நாம் செய்ய வேண்டியது என்ன?
தினமும் ஒரு கட்டுரையாவது வாசியுங்கள்.
டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிய மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை விடாதீர்கள்.

