RSS அமைப்பு ஜாதி, மதங்களை பார்ப்பதில்லை முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என யாராக இருந்தாலும், எங்கள் கொள்கைகளை ஏற்பவர்கள் தாராளமாக அமைப்பில் சேரலாம் என அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் RSS அமைப்பின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
RSS எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை தேர்தல் அரசியலிலும் பங்கெடுப்பதில்லை.
சமூகத்தை ஒன்றிணைப்பது தான் RSS அமைப்பின் முக்கியமான பணி ஆனால், அரசியல் பிரிக்கும்.
எனவே அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது இல்லை. நாங்கள் கொள்கைகளுக்கே ஆதரவு தருகிறோம்.
உதாரணத்திற்கு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று விரும்பினோம்.
எனவே அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அரசியல் கட்சிகளுக்கு ஸ்வயம் சேவகர்கள் ஓட்டளித்தனர்.
இதன் காரணமாகவே, பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தோம். அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு காங்., ஆதரவு அளித்திருந்தால், நிச்சயம் அந்த கட்சிக்கு ஸ்வயம் சேவகர்கள் ஓட்டளித்திருப்பர்.
எந்த ஒரு அரசியல் கட்சி மீதும் எங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது. சங் கட்சி என்று எதுவும் இல்லை. எங்களுக்கு என எந்த கட்சியும் இல்லை. ஆனால் எல்லா கட்சியும் எங்களுடையது.
ஏனெனில் அவை பாரதத்தில் தோன்றிய கட்சிகள். தேசிய கொள்கைகளுக்கு ஆதரவு தருகிறோம் ராஜ நீதிகளுக்கு அல்ல.
எங்களுக்கென்று ஒரு பார்வை இருக்கிறது. அந்த திசையை நோக்கியே நாட்டை வழிநடத்தி செல்ல விரும்புகிறோம்.
அந்த பாதைக்கு வரும் எவருக்கும் எங்களது ஆதரவு இருக்கும். RSS அமைப்பில் முஸ்லிம்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று கேட்கின்றனர்.
சங்கத்தில் சேரும் யாரையும் நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இங்கு ஜாதி, மதம் கேட்கப்படுவதில்லை.
எங்களை பொறுத்தவரை எந்த பிராமணருக்கும் இடம் இல்லை. முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என மத அடையாளங்களுடன் வருபவர்களுக்கும் அனுமதி கிடையாது.
RSS அமைப்பில் சேர வேண்டுமெனில், ஜாதி, மத அடையாளங்களை விட்டொழித்தவர்களாக இருக்க வேண்டும் அவர்களுக்கு மட்டுமே அனுமதி. ஷாகாவுக்கு நீங்கள் வந்தால், பாரத மாதாவின் மகனாக மட்டுமே வரவேண்டும் மற்ற அடையாளங்கள் தேவையில்லை.
எனவே முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் கூட ஷாகாவுக்கு வரலாம். ஆனால், தங்களுடைய மத அடையாளங்களை விட்டு விட்டு வர வேண்டும்.
RSS அமைப்பு ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று சிலர் கேள்வி கேட்கின்றனர்.
இதற்கு பல முறை பதில் அளித்து விட்டோம். இருந்தாலும் இந்த கேள்விக்கான விடையை மீண்டும் சொல்கிறேன்.
RSS துவக்கப்பட்ட ஆண்டு 1925. அப்போது, பிரிட்டிஷ் அரசின் ஆட்சியில் எப்படி அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
நாடு சுதந்திரம் பெற்ற பின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம் ஆக்கப்படவில்லை அதற்கான சட்டமும் இயற்றப்படவில்லை.
தனிநபர்களின் அமைப்புகளுக்கு கூட சட்டப்பூர்வ அந்தஸ்து மட்டுமே வழங்கப்படுகிறது.
அதன்படி நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளோம். மேலும் நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு.
மூன்று முறை தடையை சந்தித்துள்ளோம். அந்த வகையில் அரசு எங்களை அங்கீகரித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பை எப்படி தடை செய்ய முடியும்? ஒவ்வொரு முறையும் அரசு விதித்த தடையை நீதிமன்றங்கள் ரத்து செய்து இருக்கின்றன.
RSS அமைப்பு சட்ட ரீதியானது அரசியலமைப்புக்கு எதிரானதல்ல.
எனவே, அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
நிறைய விஷயங்கள் அங்கீகரிக்கப்படாமல் தான் இருக்கின்றன. அவ்வளவு ஏன், ஹிந்து தர்மம் கூட அங்கீகரிக்கப்படவில்லை. காவிக்கொடி எங்களது குரு. அதுபோல, மூவர்ண தேசியக்கொடி மீதும் RSS உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறது.
கடந்த 1971ல் பாகிஸ்தான் நம் மீது படையெடுத்த போது என்ன நடந்தது. 90,000 பேர் கொண்ட முழு ராணுவத்தையும் பாக்., இழந்தது.
ஆனாலும், அந்நாடு பாடம் கற்கவே இல்லை. இந்தியாவுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, இணக்கமாகச் செல்வது தான் நன்மை தரும் என்பதை பாகிஸ்தான் உணரவே இல்லை.
கசப்பு உணர்வுகளை மறந்து இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது தான், அந்நாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும். இல்லையெனில், அவர்களுக்கு தான் பாதிப்பு.
நாம் பேசும் இந்த ‘மொழி’ பாகிஸ்தானுக்கு புரியவில்லை. எனவே, அவர்களுக்கு புரியும் மொழியில் நாம் பேச வேண்டும்.
‘இந்தியாவை நம்மால் எதுவும் செய்ய முடியாது’ என பாகிஸ்தான் உணரும் அளவுக்கு, அந்த ‘மொழி’ இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை சமாளிக்க, நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
தாக்குதல்களை முறியடிக்க தக்க பதிலடி தர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, பாகிஸ்தானுக்கு ஒரு நாள் புரிய வரும்.
அதன் பின் அமைதியான அண்டை நாடாக மாறும். அப்படி மாறினால் அந்நாடு நிச்சயம் வளர்ச்சியை நோக்கி முன்னேறும்.
இவ்வாறு RSS தலைவர் மோகன் பகவத் பேசினார்.

