தேர்தலில் போட்டியிடுவது தனக்கு செட் ஆகாது என்றும், அதனால் தனது படத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்து விடும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவருடன் ஜி.வி.பிரகாஷ் குமார், படக் குழுவினர் மற்றும் புதிதாக வெற்றி பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “திரிஷா இல்லனா நயன்தாரா படப்பிடிப்பின் போது எனக்கு ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு வைப் கிடைத்தது. அதன் பிறகு ஹேப்பிராஜ் இயக்குநருடனும் அதே வைப் கிடைத்திருக்கிறது. இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். முதலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருமே புதிது என்பதால் எனக்கு சற்று பயமாக இருந்தது. பாதியிலேயே படத்தை கைவிட்டு விடுவார்கள் என நினைத்தேன்.
ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஓடிடி வரை படத்தை விற்று விட்டனர். இந்த படம் அப்பாஸ் சாருக்கு கம்பேக்காக இருக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர் என்பது அவரோடு பழகிய போது தான் தெரிந்தது. அவருடன் செலவழித்த நாட்களை மறக்கவே மாட்டேன். இந்தப் படம் அனைவரையும் ஒரு சேர அழவும், சிரிக்கவும் வைக்கும்” என பேசினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் என்னை போட்டியிட அழைத்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் மேடையில் பேசினார். ஆனால் தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார். ஏதாவது பஞ்சாயத்தில் உட்கார்ந்து, அந்த பஞ்சாயத்திற்கு தீர்ப்பு சொல்லி, நமது படத்திற்கு ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்” என்றார்.
தொடர்ந்து படம் குறித்து பேசுகையில், ஜி.வி பிரகாஷ் இன்னும் 50 வருடத்திற்கு பிறகும் கூட பள்ளி மாணவனாகவே நடிக்கலாம் என புகழ்ந்தார்.
நடிகர் கவின் பேசுகையில், “லவ் டுடே டிரெய்லர் பார்க்கும் போது என்ன வைப் இருந்ததோ, அதே வைப் ‘ஹேப்பி ராஜ்’ படத்தோட டீசர் பார்க்கும் போதும் உள்ளது. பிறகு தான் இப்படத்தின் இயக்குநர் மரிய ராஜா, பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் என தெரியவந்தது. படத்தோட காஸ்டிங் சரியாக இருந்தால் நாம் பாதி கிணறை தாண்டியதற்கு சமம் என இயக்குநர் நெல்சன் கூறுவார். ஆனால் இவர்கள் முக்கால்வாசி கிணறை தாண்டிவிட்டனர்” என்றார். பிறகு ஜி.வி.பிரகாஷை பார்த்து, நான்கு படத்திற்கு ஒரு படம் இது போன்று நடியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

