நடிகை த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்திற்கு நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் பார்த்திபன் தனியார் யூ டியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மேடையில் அவரிடம் நடிகை த்ரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பார்த்திபன், “குந்தவையை தற்போது வீட்டிற்குள் குந்த வைத்தால் நல்லது. நிறைய பிரச்சனைகள் வராமல் இருக்கும். அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக கூற முடியாது” என கூறினார்.
இந்த கருத்திற்கு நடிகை த்ரிஷா மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”ஒரு நபருடைய உதவியாளர் மூலமாக வந்த வேண்டுகோளின் பேரில் எனது பெயரும், என்னுடைய புகைப்படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாக சமீபத்திய நடைபெற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக வெளிப்படுத்த மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள், யாரைக் குறித்துப் பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தைப் பற்றியே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டும்” என பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து த்ரிஷா குறித்து கருத்து கூறிய விவகாரத்தில் நடிகர் பார்த்திபன் ஆடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஆடியோவில் “எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருத்தத்தை தவிர வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ஆடியோவில் “சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. தனியார் யூடியூப் சேனல் நிகழ்வில் கேட்கப்பட்ட 20 ரேபிட் ஃபயர் கேள்விகளுக்கு சற்றும் யோசிக்காமல் டான் டான் என பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷாவின் புகைப்படம் திரையில் வந்ததும் என்ன சொல்வது என யோசித்தேன். அப்போது குந்தவை, குந்தவை என நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குரல் எழுப்பினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே, ’குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும், பிரச்சனை வராமல் இருக்க’ என கூறினேன்” உடனே அரங்கமே கை தட்டியது.
அவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். மேடையில் இருந்து இறங்கி வந்ததும் ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் குந்தவை குறித்த பதிலை தவிர்த்திருக்கலாம் என்றார். உடனே நான் மேடையில் பேசியதை வெளியிட வேண்டாம் என அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி, சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காக நானும் எனது வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்து விட்டு, சுதந்திரத்தை கைப்பிடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைப்பவன் நான். எனவே பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்க சக்தி” என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய், த்ரிஷா இருவரும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற வீடியோ வைரலான நிலையில், த்ரிஷா குறித்து பார்த்திபன் கூறிய கருத்து பேசு பொருளானது.

