வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பறந்து வந்த ராட்சத பலூன் திடீரென வயல்வெளியில் இறங்கிய சம்பவம் வடபழஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் தனியாருக்கு சொந்தமான ராட்சத பாராசூட் பலூன் ஒன்று பாலமேடு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வானில் பறந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பலூன் திடீரென வடபழஞ்சி அருகே வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கியது.
இதனால் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த பொதுமக்கள், பாராசூட் பலூனை அருகில் சென்று பார்க்க வயல்வெளியில் குவிந்தனர். அப்போது பாராசூட் பலூனில் பயணித்தவர்களிடம் என்ன நடந்தது? என்று அப்பகுதி மக்கள் கேட்டனர்.
தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தின் சார்பில், ராட்சத பாராசூட் பலூன் மூலம் மதுரையை சுற்றி பார்க்கும் சுற்றுலா திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாலமேட்டில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு ராட்சத பாராசூட் பலூனில் ஏறி மதுரையை நோக்கி செல்ல சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த ராட்சத பலூன் திடீரென வடபழஞ்சி அருகே வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கியது. நல்வாய்ப்பாக அதில் பயணித்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. காற்றின் வேகத்தை பார்த்து சுதாரித்துக் கொண்ட பாராசூட் பலூனை இயக்கிய வெளிநாட்டவர் அதனை பத்திரமாக தரை இறக்கி உள்ளார்.
தங்கள் பகுதியில் தாழ்வாக பறந்து கொண்டிருந்த ராட்சத பலூனை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த பலூன் திடீரென வயல்வெளிக்குள் இறங்கியதால் அதனை பார்க்க அங்கு பெரும் கூட்டம் கூடியது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் அங்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பலூனை லாரி மூலம் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
காற்றில் பறந்து வந்த ராட்சத பலூன் திடீரென வயல்வெளியில் இறங்கிய சம்பவம் வடபழஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

