தே.ஜ. கூட்டணியில் நடிகர் விஜய் வருகிறாரா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்திபெற்ற சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது காமாட்சி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றிபெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி தீபாராதனை செய்தார். அடுத்து வரதராஜ பெருமாள் கோயில்லும் சென்று சாமி தரிசனம் செய்ய செய்தார்.
அடுத்தடுத்து 3 கோயில்களில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. விஜய் தே.ஜ கூட்டணியில் சேரவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டதற்கு, “விஜய் வருவதாக கூறுவதை உங்களை போலத்தான் நானும் தகவலாக டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன். ஆனால் உறுதியான செய்தி எதுவும் வரவில்லை.
அதே சமயம், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார். வருபவர்கள் உண்மையாக திமுகவை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை” என்றார்.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “பிஜேபி ஆளுகின்ற வட மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும்தான் தட்டுப்பாடு உள்ளது என செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி மத்திய அரசின் மீது பழியை போடுவதற்கு திமுக போராடுகிறது.
எரிவாயு தட்டுப்பாடு என்பது பொய். போர் நடைபெற்றால் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்வதும், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதும் சகஜம்” என்று பதிலளித்தார்.
திமுக மாநாடு குறித்து கேட்டதற்கு, “திமுக மாநாடு சலசலப்பாகி, பிசுபிசுப்பாக ஆகிவிட்டது. அந்த மாநாட்டிற்கு முன்பு போல எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. திமுக மாநாடு தோல்வி அடைந்தது. ஆனால், பாரத பிரதமர் மோடி பங்கேற்ற திருச்சி மாநாடு வல்லமை படைத்த மாநாடாக நடைபெற்றது. நரேந்திர மோடி மற்றும் எடப்பாடி கூட்டணி அற்புதமான ஆன்மிக கூட்டணி. தேச நலனுக்காக இந்த கூட்டணி நிச்சயம் வெல்லும்” என்று தெரிவித்தார்.

