வனப்பகுதிகளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்கள் 3 மாதங்களில் முழுவதுமாக அகற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2019-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்களை அகற்ற சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களே மத்திய அதிகாரியாக இருந்து பணிகளை நேரடியாக கவனிப்பார். வெட்டப்பட்ட மரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒருமுறை மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் வளராத வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிலங்களில் இருக்கும் கருவேல மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிலங்களில் இருக்கும் மரங்களை அனுமதி பெற்று அகற்ற வேண்டும் என்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. வெட்டப்பட்ட மரங்கள் டன் 1000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நாட்டு மரங்களை வளர்க்க பயன்படுத்தப்படும். எந்த காரணத்திற்காகவும் பணிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கருவேல மரங்களை அகற்றவும், நாட்டு மரங்களை வளர்த்தால் மதிப்பெண் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப்படும். மாணவர்கள் பெறும் சான்றிதழை வேலை வாய்ப்பின் போது நாட்டிற்காக சேவை செய்ததாக பெருமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவர்கள் மரம் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். தீவிரமாக கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அறுவடை காலம் என்பதல் குறைந்தது 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். தற்போது மரங்களை அகற்றினால் விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற 11 ஆண்டுகளைக்கு முன் இந்த வழக்கு தொடரப்பட்டது.
கேரளாவில் கருவேல மரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் மிகவும் அபாயகரமான கருவேல மரங்களாக உள்ளது. இது தரிசு மற்றும் விவசாய நிலங்களிலும் பரவியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் குழு 3 மாதத்திற்கு ஒரு முறை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். தலைமை வனத்துறை செயலாளர் தலைமையில் செயல்படும் குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் கருவேல மரங்களை தமிழகத்தில் இருந்து அகற்றவே முடியாது” என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பல ஆண்டுகளாக பல்வேறு உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. அரசு கேட்கும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றம் தயாராக உள்ளது. மாநில அரசுக்கு மரங்களை அகற்றுவதில் தனது கடமையை செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே நிலங்கள் மற்றும் ரயில் பாதைகளில் உள்ள மரங்களையும் அகற்ற உத்தரவிடப்படும்” என தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

