பனையூர் அருகே கடல் அலையில் சிக்கி ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் மாயமானார். பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஆணின் உடல் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எப்போதும் சுற்றுலா பயணிகளையும் பொழுதுபோக்கிற்காக கூடும் இளைஞர்களின் கூட்டத்தையும் பார்க்க முடியும். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் சாலையோரங்களில் பொழுதுபோக்கிற்காக செல்வதுண்டு.
அந்த வகையில், கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூர் அருகே உள்ள முத்தண்டி நயினார் குப்பம் கடற்கரைக்கு பிரபவ ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 30 பேர் கொண்ட குழு பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர். அங்கு ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு சிலர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது திடீரென்று ஏற்பட்ட ராட்சத அலையில், 25 வயதுடைய மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் என்ற ஒரு ஆண் மற்றும் 25 வயது உடைய மயூரி என்ற ஒரு பெண் சிக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த உடன் சென்றவர்கள் கடலுக்குள் ஓடிச்சென்று இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஒருவழியாக மயூரி என்ற பெண்ணை மீட்ட நிலையில், அவர் சுய நினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக; ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்க திட்டம்?
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்ட ஜெய் என்பவர் இதுவரை கிடைக்கவில்லை. எனவே கடற்கரை ஓரம் வசிக்கக்கூடிய மீனவர்களின் உதவியுடன் கானத்தூர் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த கடற்கரை முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இச்சம்பவம் குறித்து காவல் துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாளில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக சென்ற இடத்தில் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

