நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 2026 முதல் 2050 வரையிலான பல விஷயங்களை இணைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது;
2026 மத்திய பட்ஜெட்டில், 2025-26 நிதியாண்டில் ரூ.11.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதனம், 2026-27 நிதியாண்டில் ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடுகளுடன் சேர்த்து, பயனுள்ள மூலதனச் செலவு ரூ.17.1 லட்சம் கோடியாக உள்ளது.
கவனிக்கத்தக்க வகையில் இந்த பட்ஜெட்டில் ஏஐ கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு அதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. மேலும், ஏஐ கல்வி எலைட் அளவில் மட்டும் இல்லாமல், அனைத்து மக்களுக்கானது என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள்
இளைஞர்கள் கல்வியை முடித்துவிட்டு, திறன்களைப் பெற எங்கு செல்ல வேண்டும் என்று தேடுவதற்குப் பதிலாக, திறன் கூறுகளை கல்வியிலேயே பெறலாம். அதனால் படிப்பு முடிந்ததுமே அவர்கள் தொழில்முனைவோராக வெளியே வருவார்கள். கல்வி மையங்களாக இந்த ‘மெகா தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள்’ எந்த மாநிலத்திலும் வரலாம். இந்த பிரமாண்ட உயர்கல்வி மையத்தை ஆதரிக்கவும், மாணவர்கள் அங்கு சென்று தொழில்முனைவோராக வெளிவரவும் மாநிலங்களுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.
உள்கட்டமைப்பு
சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளும் மட்டுமல்ல; நீர்வழிப் பாதைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம், இதனால் தளவாட செலவு (Logistics Cost) குறையும். மேலும் கடல் துறைமுகங்களுடன் இணைக்கப்படாத மாநிலங்கள் குறைந்த செலவில் பொருட்களை வேகமாக நகர்த்தும் நன்மையைப் பெறும்.
மெகா ஜவுளி பூங்காக்களுக்காக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஜவுளி தொழில்துறைக்கு இது பொருந்தும். உற்பத்தித் துறையின் ஒரு பகுதியாக ஜவுளி தொழில்துறை மாறப் போகின்றன. இந்தத் துறையில் நுழைய விரும்பும் எந்தவொரு மாநிலத்தையும் நான் வரவேற்கிறேன். அவர்களுடன் ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
பயோஃபார்மாவில் கவனம்
பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பல பரிமாண வளர்ச்சிகளுக்காக பயோஃபார்மா மற்றும் செமிகண்டக்டர் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஐந்து மண்டல மருத்துவ மையங்கள் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கப் போகின்றன.
ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு
விவசாயிகள் எந்த நிதிச் சுமையையோ அல்லது பற்றாக்குறையையோ எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு பட்ஜெட்டில் 1.71 லட்சம் கோடி முன்மொழியப்பட்டுள்ளது. பீகாரின் மக்கானா வாரியத் திட்டத்திற்கான தொகை ரூ.30 கோடியிலிருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பீகார் அரசு அந்தத் திட்டத்திற்காக நிலத்தை ஒதுக்கியுள்ளது, இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ‘கிரிஷி உன்னதி யோஜனா’ திட்டத்திற்கும் ஒரு சேர நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது.
‘உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்த காங்கிரஸ்’
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மூலம், 1.5 பில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து சரண் அடைந்துவிட்டதாக சாடினார். அதற்கு எதிர்வினையாற்றிய நிர்மலா சீதாராமன், ” பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்தது. ஏழை விவசாயிகளை விற்றது.
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததிலிருந்து பால் மீதான வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல, புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் எழுதுபொருளுக்கும் வரி இல்லை. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி அவையில் தவறான குறிப்புகளை கூறியுள்ளார்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

