தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது.
அதிலும் டெல்டா தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக 22ம் தேதி இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் 24ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதனையடுத்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24ம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
22ம் தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? என்பது 26ம் தேதிக்கு பிறகு தான் சொல்ல முடியும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.

