டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 39 ரன்களையும், டிம் செஃபெர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்கள் பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், கேப்டன் ஹாரி ப்ரூக் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் பான்டனும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் வில் ஜேக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களையும், ரெஹான் அஹ்மத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்து அசத்தியது.
மறுபக்கம் இந்த தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகிவுள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் வில் ஜேக்ஸ் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் வெல்லும் நான்காவது ஆட்ட நாயகன் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற ஷேன் வாட்சனின் சாதனையை வில் ஜேக்ஸ் முறியடித்துள்ளார். முன்னதாக 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் 4 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்சமயம் அதனை வில் ஜேக்ஸ் சமன் செய்துள்ளார்.

